Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்  ஆட்சியர் ச.உமா தகவல்

நவம்பர் 30, 2023 04:11

நாமக்கல்: கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட் பட்ட இளைஞர்களுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்ட மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட அளவிலான போட்டிகள் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில்  03.12.2023, ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் திருச்சி மெயின் ரோடு, ரமேஷ் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஸ்பெக்டிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில்  நடைபெறுகிறது.
            
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய கலை போட்டிகள் காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்பேட்டியிலும்  5 வர்ணங்கள் இராகம், சுரத்துடன் 5 தமிழ்பாடல்கள்  இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.

தாளக்கருவிகளான  தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பரதநாட்டியத்தில் 3  வர்ணங்கள்  மற்றும் 5 தமிழ்  பாடல்கள்  நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். 

கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம்,  மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.

ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும்.

அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும்.

நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். 

மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் விவரம் வேண்டுவோர் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையம், கைப்பேசி எண். 99444-57244 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க நாமக்கல் மாவட்ட  இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்